ரெய்கி

ரெய்கி கலையின் நிறுவனர்கள்

டாக்டர் சுஜிரோ ஹயாஷி (Dr. Chujiro Hayashi)

டாக்டர் சுஜிரோ ஹயாஷி (Dr. Chujiro Hayashi) அவர்கள் டாக்டர் மிக்காவோ உசுய் அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். இவர் 1880 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தோக்கியோவில் பிறந்தார். இவர் டாக்டர் மிக்காவோ உசுய் அவர்களிடம் ரெய்கி பயின்று டோக்கியோ, ஜப்பானில் ஒரு ரெய்கி மருத்துவ விடுதியைத் தொடங்கி நடத்தி வந்தார்.

ரெய்கியை ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதிலிருந்து, ஒரு மருத்துவ முறையாக மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். மிக்காவோ உசுய் அவர்களின் மறைவுக்குப் பிறகு இவர் தான் தலைமை மாஸ்டராக (Grandmaster) தலைமை தாங்கினார். பல மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த இவர் 1940 ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி காலமானார்.

திருமதி ஹவயோ ஹிரோமி தகத (Hawayo Hiromi Takata)

திருமதி ஹவயோ ஹிரோமி தகத (Hawayo Hiromi Takata), அமெரிக்காவில் ஹவாயில் 1900 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தவர். ரெய்கி மேற்கத்திய நாடுகளில் பரவியதற்கும், இன்று உலகம் முழுவதும் பரவி, பிரபல்யமாக இருப்பதற்கும் இவர் முக்கிய காரணமாவார்.

செவிவழிச் செய்தியாக கூறப்படும் ஒரு சம்பவம். திருமதி தகத தனது குடும்பத்தாரைச் சந்திப்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்குச் சென்றிருந்தார். ஜப்பானில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் நோய்வாய்ப்படுகிறார். அவரின் நோயைக் குணப்படுத்துவதற்குக் கண்டிப்பாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அறுவை சிகிச்சையில் உடன்படாத திருமதி தகத அதற்கு ஏதாவது மாற்று மருத்துவம் இருக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

அவரது நோயைக் குணப்படுத்தக்கூடிய சரியான மருத்துவ முறையை அறியாததால் இறுதியில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார். அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் வேளையில் அவரின் செவிகளில் “உன் நோய்க்கான மருத்துவம் தோக்கியோவில் இருக்கிறது அங்கே செல்” என்று ஒரு அசரீரி ஒலிக்கிறது. உடனே அறுவைச் சிகிச்சையை ரத்து செய்துவிட்டு டோக்கியோவிற்குப் புறப்படுகிறார். தோக்கியோவில் டாக்டர் ஹயாஷியின் கிளினிக்கில் ரெய்கி சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைகிறார்.

அன்றைய காலகட்டத்தில் ஜப்பான் பல போர்களில் கலந்து கொண்டிருந்தது. ஆண்கள் அனைவரும் கட்டாயமாக போர்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்கள். ரெய்கி கலையை அறிந்த அத்தனை ஆண்களும் போரில் மடிந்துவிட்டால்; இந்தக் கலை அழிந்துவிடும் என்பதாலும், மேலும் வெளிநாட்டில் வாழும் பெண் என்பதாலும் டாக்டர் ஹயாஷி திருமதி தக்கதவுக்கு ரெய்கியை பயிற்சி அளித்தார். திருமதி தகத மூலமாக இந்தக் கலையை வெளிநாட்டில் பாதுகாக்க எண்ணினார்.

திருமதி தகத ரெய்கியை முழுமையாக கற்றுக்கொண்டு அமெரிக்கா திரும்பி அங்கு ஒரு ரெய்கி மருத்துவ விடுதியைத் தொடங்கினார். அவர் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் ஜப்பானியர் அல்லாதவர்களுக்கும் ரெய்கி கலையைக் கற்றுத்தரத் தொடங்கினார். அமெரிக்காவிலிருந்து இந்தக் கலை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இன்று உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான மக்கள் ரெய்கியினால் பயன் பெற்று வருகின்றனர். அதன் வரிசையில் நீங்களும் இப்போது சேர்த்துக் கொண்டீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X